நண்பனே…
உன்னைப் பற்றி
நீயேன்
உயர்வாய் நினைக்கத்
தயங்குகிறாய் ?
மாலுமிகளே
சஞ்சலப் பட்டால்
சுக்கான் பிடிப்பது
சுலபமாயிருக்குமா ?
நீ
சொல்லுமிடம் செல்ல
உன் கால்கள்,
நீ
நீட்டுமிடம் நிற்க
உன் கைகள்
பின் ஏன் தனியன் என்று
தாழிக்குள் தாழ்கிறாய் ?
பூக்களின் பெருமையை
வண்டுகள் வாசித்துச்
சொல்லும்,
ஆனால் மொட்டை விட்டு
வெளியே வருவது
பூக்களின் பணியல்லவா ?
தானியம் தின்னும் கலை
தாய்க் கோழி தரும்
ஆரம்பக் கல்வியாகலாம்,
ஆனாலும்
அலகு கொத்துதல்
குஞ்சுகளின் கடமையல்லவா?
ஒவ்வோர் மரமும்
ஒவ்வோர் வரம்.
மூங்கில்கள் மட்டுமே
முளைக்குமென்றால்
பூமியின் தேவைகள் தீராது.
தூக்கம் வந்தாலே
சவக்குழிக்குள்
படுத்துக் கொள்ளும்
தாழ்வு எண்ணக் குழிகளை
ஏன்
தொடர்ந்து வெட்டுகிறாய் ?
கூடு கலைந்து போனதால்
தூக்கிலிட்டுக் கொண்ட
தூக்கணாங்குருவியை
நீ
தவமிருந்தாலும் பார்க்க இயலுமா ?
வலை கிழிந்து போனதால்
செத்துப் போக
சம்மதிக்கும்
சிலந்தியை
உன்னால் சந்திக்க இயலுமா ?
ஆறாவது அறிவு
ஆராய்வதற்கு.
அழிவின் வழிகளை
ஆயத்தப் படுத்த அல்ல.
நம்பிக்கை கொள்,
சுற்றிக் கிடக்கும்
சாபங்களை விடுத்து
உனக்குள் இருக்கும்
சாரங்களை வெளிக்கொணர்.
நீ
வைக்க மறுக்கும் நம்பிக்கையை
உன்மேல்
வேறு
யார் வைக்க இயலும் ?
நீ
காற்று.
இலைகள் அசையவில்லையென்று
கவலை எதற்கு.
நீ
தண்ணீர்.
ஆழம் போதாதென்ற
தாழ்வு மனம் எதற்கு ?
உன் தோளில்
நீயே கட்டிவைக்கும்
எந்திரக் கற்களை
இப்போதே எடுத்தெறி.
இல்லையேல்
நாளை
மாலையிட வரும் கைகளுக்கு
உன் தோள்கள்
புலப்படாது.
[…] நீ உனக்கான வரம் […]